அவசர உதவி: கர்ப்பிணியை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல உதவிய அருணாசல் ஆளுநர்
அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை அருணாசலப் பிரதேச ஆளுநர் பிரிக் பி டி மிஷ்ரா தான் பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல உதவியுள்ளார்.
இடாநகர்: அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை அருணாசலப் பிரதேச ஆளுநர் பி டி மிஷ்ரா தான் பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல உதவியுள்ளார்.
இந்தத் தகவலை அருணாச்சல மாநிலத்தின் ராஜ்பவன் வெளியிட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், ஆளுநரே உடனடியாக இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை வரவழைத்து அதில் அனுப்பிவைத்துள்ளார்.
அதோடு நின்றுவிடாமல், அவர் செல்லும் மருத்துவமனையின் பெண் மருத்துவரை அழைத்து வரவும் உடனடியாக ஆம்புலன்ஸை அனுப்பியுள்ளார். உடனடியாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் மூலம் குழந்தைப் பிறந்துள்ளது.
கர்ப்பிணிப்பெண் இருந்த தவாங்கில் இருந்து சிகிச்சை பெற வேண்டிய இடாநகருக்கு சாலை மார்கமாகச் செல்ல 15 மணி நேரம் ஆகும். ஹெலிகாப்டரில் 2 மணிநேரத்தில் சென்றதால் தாயும் - சேயும் பத்திரமாக வீடு திரும்பினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.