அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது: ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகும், பல நல்ல சம்பவங்கள் நடந்துள்ளன. நாட்டில் இருந்து ஊழலை பிரதமர் நரேந்திர மோடி அகற்றி விட்டார். இதேபோல், ராமர் கோயில் கட்டுவதற்கு இருக்கும் தடைகளையும் அவர் அகற்ற வேண்டும்.
கோயில் குறித்து பேச விரும்பாத தலைவர்கள் கூட, தற்போது கோயில் கட்டுவது குறித்து பேசுகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோயில்களுக்கு தொடர்ச்சியாக சென்று வருகிறார். சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், விஷ்ணுவுக்கு பிரமாண்ட கோயில் கட்டுவது குறித்து பேசி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் துறவிகள் சந்தித்து, அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணியை விரைவுப்படுத்தக்கோரி மனு அளித்தனர்.
அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டினால், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை பிரதமர் நரேந்திர மோடியாலும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தாலும் வெல்ல முடியும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமருக்கும், உத்தரப் பிரதேச முதல்வருக்கும் இன்னமும் அவகாசம் உள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான பணியில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். அயோத்தியில் அவர் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதை சில அரசியல் கட்சிகள் மட்டும் ஏன் எதிர்க்கின்றன என்பது தெரியவில்லை என்றார் நிருத்ய கோபால் தாஸ்.