தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு
மத்திய அரசின் முக்கியமான திட்டமாகக் கருதப்படும் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு
மத்திய அரசின் முக்கியமான திட்டமாகக் கருதப்படும் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது.
சமாஜவாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் தலைமையிலான சுகாதாரத்துக்கான நாடாளுமன்றக் குழு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்ய இருக்கிறது. இது தவிர எய்ம்ஸ் மருத்துவமனைகளின் செயல்பாடுகள், புற்றுநோய், சிறார்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை போன்றவற்றையும் இக்குழு ஆய்வு செய்யும்.
ஆயுஷ்மான் பாரத் என்று அழைக்கப்படும் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்தார். உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான இதன் மூலம் சுமார் 10.74 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் கோடிக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தின் மூலம் பயனடைய இருக்கின்றனர். இதன் மூலம், நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் மருத்துவத் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு, தனியார் என மொத்தம் 14,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை பெற முடியும்.
இப்போது வரை 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் பணம் கொடுக்காமலும் மற்றும் எந்தவித ஆவணங்களையும் நிரப்பாமலும் சிகிச்சை பெற முடியும். இதில் 98 சதவீத பயனாளிகள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுவிட்டனர். தெலங்கானா, ஒடிஸா, தில்லி, கேரளம் தவிர பிற மாநிலங்கள் அனைத்தும் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.