முகப்பு
இந்தியா

சபரிமலை நடை நாளை திறப்பு: போராட்டக்காரர்களுடனான தேவசம் போர்டு பேச்சுவார்த்தை தோல்வி

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேரள அரசுக்கு கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 17-ஆம் தேதி மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 

இதையடுத்து, கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து கேரள அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

இந்நிலையில், பந்தளம் அரச குடும்பம், சபரிமலை கோயில் பூசாரிகள் மற்றும் இந்து அமைப்புகள் பேச்சு நடத்த வருமாறு, ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அழைப்பு விடுத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அதில், ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப சேவா சமாஜம், தந்திரி மகாமண்டலம் உள்ளிட்ட அமைப்புகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டன.

இந்நிலையில், சபரிமலை கோயிலில் நாளை நடை திறக்கப்படவுள்ள நிலையில் போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  

இதற்கிடையில், ‘பூமாதா பிரிகேட்’அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் சில பெண்களுடன் சபரிமலை கோயிலுக்கு செல்ல இருப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →