மீ டூ புகார்கள் தொடர்பான மனு: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
மீ டூ (நானும் பாதிக்கப்பட்டேன்) புகார்கள் தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில்
மீ டூ (நானும் பாதிக்கப்பட்டேன்) புகார்கள் தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானது குறித்து பல பெண்கள் மீ டூ இயக்கம் மூலம் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். இதில் பல்வேறு பிரபலங்கள் புகாரில் சிக்கியுள்ளதால், இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வெளியுறவு இணையமைச்சராக இருந்த எம்.ஜே. அக்பர், இந்த புகாரில் சிக்கி பதவி விலக நேரிட்டது. இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த விஷயம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில், மீ டூ இயக்கம் மூலம் தெரிவிக்கப்படும் புகார்கள் அடிப்படையில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும், புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு உரிய உதவிகளையும், பாதுகாப்பையும் தேசிய மகளிர் ஆணையம் மூலம் வழங்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், தேசிய மகளிர் ஆணையம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தாக்கல் செய்த வழக்குரைஞர் எம்.எல்.சர்மா நேரில் ஆஜராகி, இந்த விஷயம் குறித்த தனது தரப்பு கருத்துகளை முன்வைத்து, அவசர வழக்காக ஏற்கக் கோரினார். எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கமான முறையின் படியே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்று கூறிவிட்டனர்.