ஸ்ரீநகர்: பள்ளி கல்லூரிகள் கீதை, ராமாயண புத்தங்களை வாங்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய உத்தரவை ஜம்மு காஷ்மீர் அரசு வாபஸ் பெற்றுள்ளது.
தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரும் ஜம்மு காஷ்மீர் மாநில கல்வித்துறையின் சார்பாக கடந்த 4-ஆம் தேதி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் உருது மற்றும் காஷ்மீரி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதை மற்றும் ராமாயண புத்தகங்களை வாங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவிற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.
குறிப்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா கூறும்போது, 'மாநில கல்வித்துறையின் உத்தரவு ஒரு குறிப்பிட்ட மதத்தினுடைய புத்தகத்தை மட்டும் வாங்குமாறு அமைந்திருப்பது ஏன்? ' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் பள்ளி கல்லூரிகள் கீதை, ராமாயணா புத்தங்களை வாங்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய உத்தரவை ஜம்மு காஷ்மீர் அரசு வாபஸ் பெற்றுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை மாநில தலைமைச்செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ளார்.