முகப்பு
இந்தியா

ஒரே நேரத்தில் தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ.4,555 கோடி தேவை: சட்ட ஆணையம்

ஒரே நேரத்தில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகைச்சீட்டு

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:13 AM
பகிர்:


ஒரே நேரத்தில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு ரூ.4,555 கோடி நிதி தேவைப்படும் என்று சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசிடம் சட்ட ஆணையம் தனது அறிக்கையை கடந்த வாரம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சட்ட ஆணையம் தனது ஒப்புதலை அளித்திருந்தது. மேலும் அந்த அறிக்கையில் சட்ட ஆணையம் தெரிவித்திருப்ப தாவது:
2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக, நாடு முழுவதும் 10,60,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். இந்நிலையில், மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் 2019ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்படுமெனில், 12.9 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு கருவிகள், 12.3 லட்சம் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் கட்டுப்பாட்டு கருவி, வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரம் உள்ளிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றின் விலை ரூ.33,200 ஆகும். இதன்படி கணக்கிட்டால், உடனடியாக மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுமெனில், அத்தேர்தலுக்கு தேவைப்படும் மொத்த இயந்திரங்களையும் வாங்குவதற்கு ரூ. 4,555 கோடி தேவைப்படும்.
இந்த இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகாலம் ஆகும். அப்படி கணக்கிட்டால், 2024ஆம் ஆண்டில் மீண்டும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தேவைப்படும் இயந்திரத்தை வாங்குவதற்கு ரூ.1751.17 கோடி தேவைப்படும். 2029ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு இயந்திரங்கள் வாங்க ரூ.2017.93 கோடி தேவைப்படும்.
அதன்பிறகு, 2034ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.13,981.58 கோடி தேவைப்படும். இந்த செலவினங்கள் அனைத்தும், இயந்திரத்தின் தற்போதைய விலையை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டுள்ளது.
மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், சில பொருள்களையும் வைத்தால் மட்டுமே போதுமானதாகும். இதுதவிர, கூடுதலாக எந்த செலவும் ஏற்படாது. மிகப்பெரிய வாக்குச்சாவடிகளில், கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, கூடுதலாக தேர்தல் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் சட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.