பாஜக அரசுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்: அசோக் சவாண்
மகாராஷ்டிர மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 4 நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 4 நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறது. அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, திங்கள்கிழமை நடைபெற்ற உறியடி போராட்டத்தில் பங்கேற்ற அந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவாண், பாஜக ஆட்சிக்கு வரும் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள் என்று கூறினார்.
2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் தோல்விகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில், ஜன் சங்கர்ஷ் யாத்திரை என்ற போராட்டத்தை காங்கிரஸ் நடத்த திட்டமிட்டது.
அதன் முதல்கட்ட போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோலாப்பூரில் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் அந்த மாநில சட்டப் பேரவையின் எதிர்க் கட்சித் தலைவர் ராதாகிருஷ்ணா விகே-பாட்டீல், முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவாண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில அரசுகளின் தவறான செயல்களை பானையில் வைத்து கட்டியுள்ளோம்' என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் ஏந்திக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அசோக் சவாண் உறியடி பானையை உடைத்தார்.
அதன் பின்பு அவர் பேசுகையில், நாங்கள் மத்திய அரசின் குற்றத்தை உடைத்தெரிந்தது போல் மக்களும் 2019-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பார்கள் என்று கூறினார்.
வரும் செப்டம்பர் 8-ம் தேதி புணேயில் இந்த முதல் கட்ட போராட்டம் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்களை மரத்வாடா, விதர்பா பகுதிகளில் அக்டோபர் மாதம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
தயிர் பானையை உடைக்கும் உறியடி திருவிழா கோகுலாஷ்டமியை முன்னிட்டு நடைபெறும். அந்த விழாவில் இளைஞர்கள் மனித பிரமீடு போல இணைந்து நிற்பார்கள். ஒருவர் மேலே ஏறி பானையை உடைப்பார். இந்த விளையாட்டு ஒற்றுமையாக இருந்தால் வெற்றி கிட்டும்' என்பதை நினைவூட்டும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகிறது.