புது தில்லி: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன் மீது தவறான புகார்களை எழுப்பியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.
மேலும், தவறான வழக்கைப் பதிவு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து தவறான வழக்குப் பதிவு செய்த காவல்துறை மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு முடித்துவைக்க்பபட்டது.
1994ம் ஆண்டு பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகள் சிலவற்றுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட் தொழில்நுட்பங்களை அளித்ததாக, கேரள காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நம்பி நாராயணன் நிரபராதி என சிபிஐ விசாரணையில் உறுதியான நிலையில், தன் மீது பொய் வழக்குப் போட்டதற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ரு.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.