கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (62) தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்லீறல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள மனோகர் பாரிக்கருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற பாரிக்கர், இந்த மாதத் தொடக்கத்தில் நாடு திரும்பினார். அவர் கோவா வந்த சில தினங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று திரும்பினார். இதனிடையே, கோவா அரசின் நிர்வாகப் பொறுப்புகள் மூத்த அமைச்சரிடம் வழங்கப்பட வேண்டும் என்று மாநிலத்தில் ஆளும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தீபக் தவாலிகர், செய்தியாளர்களிடம் பனாஜியில் கூறியதாவது:
மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்புகளை மூத்த அமைச்சரிடம் முதல்வர் பாரிக்கர் வழங்க வேண்டிய நேரம் இது. அப்போதுதான் நிர்வாகம் சுமுகமாக நடக்கும். கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்றார் அவர்.
உங்கள் சகோதரர் சுதின் தவாலிகரிடம் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "யார் மூத்த அமைச்சர் என்பதை அவர்களே (பாஜக) முடிவு செய்து அறிவிக்கட்டும். மூத்த அமைச்சர் ஒருவருக்கே நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்று பதிலளித்தார்.
சுதின் தவாலிகர், கோவா பொதுப் பணித் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.