மூன்று பொதுத் துறை வங்கிகள் இணைகின்றன: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத் துறை வங்கிகளை இணைக்க உள்ளதாக மத்திய அரசு அதிரடியாக திங்கள்கிழமை அறிவித்தது.
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத் துறை வங்கிகளை இணைக்க உள்ளதாக மத்திய அரசு அதிரடியாக திங்கள்கிழமை அறிவித்தது.
இந்த திட்டம் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை கூறியதாவது:
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைத்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வங்கிகளின் வலிமையான மற்றும் நீடித்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகள் ஒன்றிணைக்கப்படுவதன் மூலம் அவற்றின் கடன் வழங்கும் திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை சிறப்பான அளவில் மேம்படும். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
தற்போதைய நிலையில் வங்கிகளின் கடன் வழங்கும் நடவடிக்கைகள் மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால், பெரு நிறுவனத் துறைக்கான முதலீடுகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இது தவிர, பல வங்கிகள் அளவுக்கு அதிகமாக கடன் வழங்கியது மற்றும் அவற்றின் வாராக் கடன் அளவு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது ஆகியவற்றால் அவை மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
எனவே, இந்த வங்கிகளை இணைப்பதன் மூலம் அவற்றின் செயல்பாடு சிறப்பான வகையில் மேம்படும் என்றார் அவர்.
தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா இணைப்புக்கு பிறகு உருவாகும் நிறுவனத்துக்கு தேவையான மூலதன ஆதரவை மத்திய அரசு உறுதியாக வழங்கும். பணியாளர்கள் நலன்களும் பாதுகாக்கப்படும் என்று நிதி சேவைகள் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
இணைப்புக்குப் பிறகு அந்த மூன்று வங்கிகளும் தன்னிச்சையான செயல்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.