கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக அம்மாநிலம் முழுவதும் மின் கழிவு மலைபோல் குவிந்து பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 8.69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் காரணமாக அன்றாடம் பயன்படுத்தப்படும் ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், டிவி, மொபைல், லேப்டாப், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. இதன்காரணமாக தற்போது கேரளம் முழுவதும் இந்த மின் கழிவு மலைபோல் குவிந்து அவற்றை அப்புறப்படுத்துவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மழை வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், தற்போது மாநகராட்சி ஊழியர்களுக்கு இந்த மின் கழிவை அகற்றுவது சவாலாக அமைந்துள்ளது. இவை சரியாக அப்புறப்படுத்தவில்லை என்றால் அது இயற்கையை பாதிக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக இவை அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத சூழலில் உள்ளதாகவும் கூறினார்கள்.
இதையடுத்து கேரள அரசு அதன் சார்பு அமைப்பான தூய்மை கேரளா நிறுவனத்திடம் இந்த மின் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியை ஒதுக்கியுள்ளது. எனவே இந்த மின் கழிவுகள் அனைத்தும் போதிய ஆய்வுக்கு பின்னர் அதற்காக ஒதுக்கப்பட்ட கிடங்குகளில் வைக்கப்படவுள்ளன. எனவே அதற்கான முதல்கட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது வரை கேரளத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து மட்டும் கணிணி, எல்இடி விளக்குகள் உள்ளிட்ட 700 டன் அளவிலான மின் சாதனப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.