மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின்னர் ராகுல், தற்போது முதன்முறையாக ஆந்திர மாநிலத்தில் செவ்வாய்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கர்னூல் மாவட்டத்தில் மாணவர்களிடையே உரையாடிய ராகுல் பேசுகையில்,
ஒரு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பதை மத்திய அரசு ஏதோ சேவை செய்வது போன்று நினைக்கிறது. ஆனால் அது மத்திய அரசின் கடமை. சிறப்பு அந்தஸ்து என்பது ஆந்திர மக்களின் உரிமை. எனவே இது உங்களுக்குச் சொந்தமானது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதுதான் முதல் பணி. ஆந்திர மக்களின் உரிமையை அவர்களுக்கு பரிசளிப்பதுதான் எங்கள் நோக்கம்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பு மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த பிரதமர் அலுவலகத்தின் பொறுப்பும் ஆகும். எனவே அது மக்களுக்காக 100 சதவீதம் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புணர்வாகும். ஆனால் மக்களின் மதிப்பு குறித்து தற்போதைய பிரதமருக்கு சரியாகத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தவுடன் நிச்சயமாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.