புது தில்லி: 'ரஃபேல் அமைச்சர்' நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று விமான ஒப்பந்த ஊழல் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏராளமான விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த ஒப்பந்தத்தினை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த விவகாரத்தில் தனியார் நிறுவனத் தலைவர்களும், அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டுள்ளனர். இது ஒரு கூட்டு ஊழலுக்கு வழி வகுத்துள்ளது என்றும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
அதன் உச்சமாக ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டு விட்டார் என்று காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.ஆண்டனி செவ்வாயன்று விமர்சனம் செய்திருந்தார். அத்துடன் மத்திய பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிட்டட் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்நிறுவனத்தின் திறனைப் பற்றி நிர்மலா சீதாராமன் அவநமபிக்கையுடம் பேசுவதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.
அதேசமயம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிட்டட் நிறுவன முன்னாள் இயக்குநர் ராஜு , அமைச்சர் நிர்மலா சீதரமானின் கருத்தினை மறுத்து, ரஃபேல் வகை விமானங்களை உருவாக்கும் திறன் ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு உண்டு என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 'ரஃபேல் அமைச்சர்' நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று விமான ஒப்பந்த ஊழல் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
நடந்த ஊழலை நியாயப்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்த 'ரஃபேல் அமைச்சர்' நிர்மலா சீதாராமன், பொய் கூறும்போது மீண்டும் ஒருமுறை பிடிபட்டுள்ளார். ரஃபேல் வகை விமானங்களை உருவாக்கும் திறன் ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு இல்லை என்ற அவரது பொய்யை, அந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான ராஜு வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது இருப்பு ஏற்றுக் கொள்ள இயலாத நிலைக்குச் சென்று விட்டது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.