எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து மணப்பாறையைச் சேர்ந்த கண்பார்வை மாற்றுத்திறனாளிக்கு ஏடிஎம் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
33 வயதாகும் கலைமணி என்ற ஆசிரியருக்கு கண்பார்வை குறைபாடு இருப்பதால், அவரால் ஏடிஎம்மை சரியாகப் பயன்படுத்த முடியாது அல்லது அதனை தொலைத்துவிடும் ஆபத்தோ, வேறு யாராவது தவறாகப் பயன்படுத்தும் சிக்கலோ இருப்பதாகக் கூறி ஏடிஎம் அட்டை வழங்க வங்கி மறுத்துவிட்டது.
தனக்கு ஏடிஎம் அட்டை வழங்கக் கோரி அவர் வங்கியின் பல அதிகாரிகளை சந்தித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இது குறித்து எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்ற சமூக ஆர்வலர் காமராஜ் கலைமணி குறித்து கருத்துக் கூறியிருந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏடிஎம் அட்டை பயன்படுத்த உரிமை உள்ளதை நீதிமன்றம் வரைச் சென்று உறுதி செய்ததை அவர் விளக்கினார். மேலும் இது பற்றி சில வங்கி அதிகாரிகளுக்கு தெரியாததால் இப்படிப்பட்ட குளறுபடிகள் நேரிடுவதாகவும் கூறினார்.
உடனடியாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல வாரிய அதிகாரி, வங்கி மேலதிகாரிக்குப் பேசி கலைமணிக்கு ஏடிஎம் அட்டை வழங்க ஏற்பாடு செய்தார்.
இனி வங்கியில் நீண்ட வரிசையில் நின்று பணமெடுக்க வேண்டிய நிலை தனக்கு ஏற்படாது என்று நிம்மதி தெரிவித்தார் கலைமணி.