2014 மக்களவை தேர்தலின் போது போலீஸாரின் அனுமதி இல்லாமல் நடத்திய தேர்தல் பேரணி வழக்கில் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட 8 பேரை விடுவித்து மும்பை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
2014 மக்களவை தேர்தலின் போது வடகிழக்கு மும்பையின் மான்குர்ட் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் மீரா சன்யால் மற்றும் மேதா பட்கர் ஆகியோரது தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இந்தப் பிரசாரத்தின் பகுதியாக தேர்தல் பேரணி நடத்தப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சியினர் இந்தப் பேரணியை போக்குவரத்து போலீஸாரிடம் இருந்து அனுமதி பெறாமலும், திட்டமிடப்படாமலும் நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, 2014 மார்ச் மாதம் கேஜரிவால், மீரா சன்யால், மேதா பட்கர் உள்ளிட்ட 8 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது பட்கரை தவிர்த்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது தீர்ப்பளித்த நீதிமன்றம், இந்தப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிக்கை வழங்க போலீஸ் தவறியுள்ளது. அதனால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கேஜரிவால் உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்வதாக மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.