மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது: சரத் பவார்
நரேந்திர மோடியால் மீண்டும் நாட்டின் பிரதமராக முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
நரேந்திர மோடியால் மீண்டும் நாட்டின் பிரதமராக முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி மீதான மக்களின் எண்ணம் மாறிவிட்டது. எனவே அவரால் மீண்டும் பிரதமராக முடியாது. இந்த தேர்தலுடன் பாஜக-வுக்கு முடிவுகட்ட எதிர்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஏனென்றால் தற்போதைய சூழலில் இந்நாடு உள்ள நிலை அனைவரும் அறிந்தது தான்.
இதே நிலை தொடர்ந்தால் இதுவே கடைசி தேர்தலாக கூட அமைந்துவிடும் என்று யாராவது கூறினால் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒவ்வொரு முறை பயங்கரவாத தாக்குதல் நடந்தபோதும் பாஜக தான் ஆட்சியில் இருந்தது. பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷனை மீட்டு வர இதுவரை இந்த 56 இன்ச் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாட்டின் 75 சதவீத பொருளாதாரம் 15 சதவீத பேரிடம் தான் உள்ளது. அந்த 15 சதவீதம் பேரும் பாஜக-வுக்கு நெருக்கமானவர்களாக உள்ளனர். ராமர் கோயில் கட்டுவோம் என்று பிரசாரம் செய்து வந்தனர். ஆனால், இதுவரை ராமர் கோயில் கட்டப்படவில்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட 100 நாட்களில் கறுப்பு பணத்தை மீட்கவில்லை என்றால் என்னை தூக்கிலிடுங்கள் என்று பிரதமர் மோடி முழக்கமிட்டார். அதற்கு எந்த இடத்தை நாம் தேர்வு செய்யலாம்? என்று கடுமையாக விமர்சித்தார்.