கடும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக புதன்கிழமை அறிவித்தது. இதனால், 20,000 ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
25 ஆண்டுகளாக விமான போக்குவரத்துத் துறையில் கோலோச்சி வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த 2010-ஆம் ஆண்டில் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக, இந்த நிறுவனத்தின் வருவாய் பெருமளவில் சரிந்தது. இதனால், வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும், விமானிகளுக்கும், பிற ஊழியர்களுக்கும் ஊதியம் தருவதிலும் தாமதம் ஏற்பட்டது. மேலும், விமான எரிபொருளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை அளிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.
இவ்வாறு தொடர்ச்சியாக, இழப்பைச் சந்தித்ததால், 123 விமானங்களை இயக்கி வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து 5 விமானங்களை மட்டுமே இயக்கி வந்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு முதல் அனைத்து சேவைகளையும் நிறுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வங்கிகளிடம் இருந்தோ, வேறு வழிகளில் இருந்தோ எங்கள் நிறுவனத்துக்கு கடனுதவி கிடைக்கவில்லை.
இதனால், வேறு வழியின்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையை தாற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.