இலங்கை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை (ஏப். 21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதில், 35 வெளிநாட்டினர் உட்பட உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 158-ஆக அதிகரித்துள்ளது. 400-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிலையில், இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
இலங்கையில் நடைபெற்ற கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனத்துக்குரியது. ஆசிய பகுதிகளில் இதுபோன்ற கொலைவெறித் தாக்குதலுக்கு என்றும் இடமில்லை. இந்த நேரத்தில் இலங்கையுடன் இந்தியா துணை நிற்கும். தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு எதிராகவும் பயங்கரவாதம் விடுத்துள்ள சவால் என்றார்.