மத்தியில் ராகுல் காந்தி ஆட்சி அமைக்க தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆதரவு அளிக்க முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் என்.ரகுவீர ரெட்டி, டிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான கோரிக்கைக்கு டிஆர்எஸ் ஆதரவளித்து வருவதற்கு நன்றி. இந்தக் கோரிக்கையை பாஜக நிராகரித்தது. ஆனால், ராகுல் காந்தி வரவேற்றார். ஆட்சிக்கு வந்தால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
ராகுல் காந்தி பிரதமரானால் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பார். எனவே, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் அமர டிஆர்எஸ் ஆதரவளிக்க வேண்டும். தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஜன சேனா ஆகிய கட்சிகளும் மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக காங்கிரஸை ஆதரிக்க வேண்டும். பாஜகவுக்கு ஒருபோதும் ஆதரவளிக்க வேண்டாம். அக்கட்சி ஆந்திரத்துக்கு அநீதி இழைக்கும் என்று ரகுவீர ரெட்டி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.