மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். இது மோடி 2-ஆம் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் 3-ஆவது நிகழ்ச்சியாகும். அதில் பேசியதாவது:
மிகப் பிரமாண்டமான திருவிழாவுக்காக இந்தியா தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த திருவிழாவை இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடும். ஆம், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம் அக்டோபர் 2-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்க மக்களின் சுதந்திரத்துக்காகவும் போராடியவர். ஏழைகளுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். தனது கொள்கைகளை வாழ்ந்து காட்டியவர். அதுவே சிறந்த முன் உதாரணம் ஆகும். என்றும் சத்தியத்தின் வழி நடந்தவர். அதேபோன்று சேவை மனப்பான்மை கொண்டவராகவும் திகழ்ந்தார்.
இந்த நாள் முதல் நாம் அனைவரும் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முயற்சி எடுக்க வேண்டும். வணிகர்கள் அனைவரும் இயற்கையை பாதிக்காத பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முன்வர வேண்டும். நவீன காலப் பெண்கள் அனைவரும் முன்வந்து குழுக்களை உருவாக்கி செயல்பட வேண்டும். அதன்மூலம் நாட்டுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும். இதன்மூலம் நம்மால் நிறைய சாதிக்க இயலும்.
தற்போதைய காலச்சூழலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு கிருஷ்ணரின் வாழ்வில் இருந்து தீர்வு காண முடியும். யுகங்களுக்கு முந்தையது என்றாலும் கிருஷ்ணரின் நடவடிக்கைகள் தான் பல தலைமுறைகளுக்கு தேவையான அனைத்தையும் சரியாக பெற முன்னோடியாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியில் நான் ஹிந்தியில் பேசியதை பியர் கிரில்ஸ் எவ்வாறு புரிந்துகொண்டார் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அக்காட்சிகள் அனைத்தும் இருமுறை படமாக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினர். ஆனால், இதில் தொழில்நுட்பம் தான் எங்கள் இருவருக்கும் இடையில் பாலமாக அமைந்தது. பியர் கிரில்ஸ் தனது காதில் பொருத்தியிருந்த சிறிய மென்பொருள் சாதனம் ஒன்று, நான் பேசிய ஹிந்தியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தது என்ற சுவாரஸ்ய தகவலையும் பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார்.