முகப்பு
இந்தியா

ஒரே சமயத்தில் மூன்று அரசுப்பணிகளில் 30 ஆண்டுகளாக பணிபுரியும் பீகார் பொறியாளர்!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரே நேரத்தில் மூன்று அரசுப்பணிகளில் பணியாற்றி கடந்த 30 ஆண்டுகளாக, மூன்று பணிகளுக்குமான ஊதியத்தையும் பெற்று வந்துள்ளார் . 

Updated On : 26 ஆகஸ்ட், 2019 at 12:26 PM
job
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:25 PM

மத்திய அல்லது மாநில அரசுப்பணிகளில் இருப்பது பொதுவாக அனைத்து மக்கள் மத்தியிலும் ஒரு கௌரவமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அரசு வேலை கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. 5 ஆயிரம் பணியிடங்களுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு போட்டித்தேர்வுகள் எழுதும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க தேர்வுத்தாளும் கடினமாகவே வடிவமைக்கப்பட்டு வருகிறது. 

இந்த சூழ்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரே நேரத்தில் மூன்று அரசுப்பணிகளில் பணியாற்றி, கடந்த 30 ஆண்டுகளாக, மூன்று பணிகளுக்குமான ஊதியத்தையும் பெற்று வந்துள்ளார் . 

பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராம். இவர் மாநில அரசின் கட்டுமானதுறையில் உதவி பொறியாளர், பங்கா மற்றும் சவுபால் மாவட்டத்தில் நீர்வளத்துறை அதிகாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார். 

Advertisement

இந்த நிலையில், சமீபத்தில் பீகார் மாநில அரசு புதிய நிதி மேலாண்மை முறையை (சி.எஃப்.எம்.எஸ்) கொண்டு வந்தது. அதன்படி, அரசு அதிகாரிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

அப்போது சுரேஷ் ராம் தனது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை மட்டும் அதிகாரிகளிடம் காட்டியுள்ளார். இதர ஆவணங்களையும் நிதித்துறை அதிகாரிகள் கேட்க, சுரேஷ் ராம் சுதாரித்துக்கொண்டு வேறு வழியில்லாமல் தலைமறைவானார்.

பின்னர் விசாரணை மேற்கொண்டதில், அவர் மூன்று அரசுப்பணிகளில் பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை தேடும் பணியில் பீகார் மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அனைத்து மாநில மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சுரேஷ் ராமிடம் போலீசார் விசாரணை செய்த பின்னரே, அவர் எந்த முறையில் மோசடி செய்து மூன்று அரசுப்பணிகளை பெற்றார் என்று தெரியவரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.