முகப்பு
இந்தியா

நம் நாட்டின் மிகப்பெரிய நில உரிமையாளர் யார் தெரியுமா?

நாட்டில் அதிக நிலத்தை தன் வசம் வைத்துள்ள அமைப்பு இந்திய ரயில்வே அமைச்சகம் என்று  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:57 AM
பகிர்:

நாட்டில் அதிக நிலத்தை தன் வசம் வைத்துள்ள அமைப்பு இந்திய ரயில்வே அமைச்சகம் என்று  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வே உலக அளவில் நான்காவது மிகப்பெரிய ரயில்வே நெட்ஒர்க்காக திகழ்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 2.30 கோடி பயணிகள் பயணிக்கிறார்கள். 2,700க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நாட்டிலேயே அதிக நிலப்பரப்பை கொண்டுள்ள அமைப்பு எது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மத்திய அரசும் பதில் அளித்துள்ளது. அதன்படி,

'இந்திய ரயில்வே வசம் உள்ள நிலத்தின் பரப்பளவு கோவா அல்லது டெல்லியை விட அதிகமானது. மார்ச் 3, 2018 நிலவரப்படி இந்திய ரயில்வே சுமார் 4.77 லட்சம் ஹெக்டேர் நிலத்தை கொண்டுள்ளது. 

இந்திய ரயில்வேயின் வசம் உள்ள இந்த நிலப்பகுதி ஒரு சில மாநிலங்களின் பரப்பளவை விட 22% அதிகமாகும். கோவாவின் மொத்த புவியியல் பரப்பளவு 3.7 லட்சம் ஹெக்டேர். டெல்லி மொத்த நிலப்பரப்பு 1.48 லட்சம் ஹெக்டேராக உள்ளது. 

ரயில்வேயின் 4.77 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு என்பது அதன் மொத்த நிலப்பரப்பு ஆகும். இதில், ரயில்வே நிலையங்கள், பணிமனைகள், தண்டவாளங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்கள் போக எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்த தகவல் அறிக்கை இல்லை' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு முன்னதாக 2017ம் ஆண்டு 2,929 சதுர கி.மீ (2.92 லட்சம் ஹெக்டேர்) பரப்பளவை இந்திய ரயில்வே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
இந்த விவரங்கள் 2017 ஆம் ஆண்டில் அரசு நில தகவல் அமைப்பில் (ஜி.எல்.ஐ.எஸ்) பதிவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.