நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறி வரும் சூழலில், தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் அவர்கள் இறந்தனர். இந்த சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் 5 பேர் கொண்ட கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நாளை (திங்கள்கிழமை) தனது 73-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். எனவே, நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருவதால், இந்த சூழலில் தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார்.