சென்னை: நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் என்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேறியது. இதையடுத்து புதனன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவற்றுவது தொடர்பாக மாநிலங்களவையில் இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில் மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதையடுத்து மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து குடியுரிமை மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் என்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
இதுதொட ர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் இது. இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி. மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பிகளு க்கும் நன்றி. இம்மசோதாவானது இதுவரை வருடக்கணக்காக துன்புறுத்தப்பட்டு வந்தவர்களது துயரத்தை போக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.