குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி கர்நாடகத்தில் இடதுசாரி மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் கூட்டமைப்பு இன்று வியாழக்கிழமை (டிச.19) 'பந்த்' அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி பெங்களூரில் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. இதில், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு டவுன் ஹால் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பதாகையுடன் கோஷமிட்ட அவரை போலீஸார் இழுத்துச் சென்றனர். அவர் தனது கையில் காந்தி மற்றும் அம்பேத்கர் புகைப்படத்துடன் அரசுக்கு எதிராக பதாகைகளை வைத்திருந்ததாகவும், செய்தியாளர்களிடம் பேசியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் அவர் பேசுகையில், 'காவல்துறையினர் மத்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறார்கள். மத்திய அரசின் ஒரு நடவடிக்கைக்கு, ஒழுக்கமான, நியாயமான வன்முறையற்ற முறையில் நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். ஆனால், போலீஸார் வந்தபிறகுதான் வன்முறை உருவாகிறது. அரசியலமைப்பின் மதிப்பினை நாங்கள் நிலைநாட்ட விரும்புகிறோம். எங்களையும், எங்களது குரலையும் அடக்க முடியாது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.