வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்-க்கு எதிரான பதவி நீக்கக் கோரும் தீர்மானங்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டன.
தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எழுப்பப்பட்டது.
இதையடுத்து, டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்து, கீழவையில் நிறைவேற்றியுள்ளது.
இது குறித்து தனது கருத்தைக் கூறியிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனக்கு எதிரான பதவி நீக்கக் கோரும் தீர்மானம், ஒரு அரசியல் தற்கொலை மற்றும் இதனை நிறைவேற்றியிருப்பது ஜனநாயகத்துக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம் என்றும் சாடியுள்ளார்.
"மக்களுக்கான அதிபரை மக்களே தேர்ந்தெடுப்பதற்கான உரிமை மக்களுக்கு இருப்பதை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. மக்களுக்காக ஒன்றும் செய்யாத ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்க மக்கள் மீது தங்கள் ஆழ்ந்த வெறுப்புணர்வை இதன் மூலம் காட்டியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
"சட்டவிரோதமாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது, ஜனநாயகக் கட்சியினர் அரங்கேற்றிய அரசியல் தற்கொலை" என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கட்சி ஒழுக்கத்தைக் காப்பாற்றி, இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களை டிரம்ப் பாராட்டியதோடு, குடியரசுக் கட்சி இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டதில்லை, அதே சமயம், கட்சி உறுப்பினர்கள் தற்போது இருப்பதைப் போல ஒன்றிணைந்ததும் இல்லை" என்றும் அவர் கூறினார்,
குடியரசுக் கட்சியினர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் 53 - 47 என்ற பெரும்பான்மையில் உள்ளனர். எனவே கீழவையில் நிறைவேற்றப்பட்ட அந்த இரு மசோதாக்களும் அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் விசாரணைக்காக தாக்கல் செய்யப்படும். அங்கு டிரம்பின் குடியரசுக் கட்சியினரின் பலம் அதிகமாக உள்ளதால், அவரது பதவி நீக்கம் தொடர்பான மசோதா செனட் சபையில் நிராகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.