குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌ மற்றும் சாம்பல் பகுதிகளில் இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. தில்லியில் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டது.
இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்ற வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ், ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித், கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி. ராஜா, சீதாராம் யெச்சூரி உட்பட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில் நிலவும் சூழல் குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா ஆகியோர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.