வாகன பழுது நீக்கும் மையத்தில் 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ஹைதராபாத் அருகே மெட்செல் வாகன பழுது நீக்கும் மையத்தின் அலட்சியம் காரணமாக நான்கு வயது சிறுவன் உயிர் இழந்தான்.
ஹைதராபாத் அருகே மெட்செல் எனும் பகுதியில் வாகன பழுது நீக்கும் மையத்தில் அமைந்துள்ள குழியில் விழுந்து சின்தா அஞ்சய்யா (4) ஞாயிற்றுக்கிழமை மாலை உயிர் இழந்தான்.
வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமராவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
வாகனப் பழுது நீக்கத்துக்காக தோண்டப்பட்ட குழியை முறையாக மூடாமல் இருந்த அந்த தனியார் மையத்தின் அலட்சியத்தால் சிறுவனின் மரணம் ஏற்பட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
முன்னதாக விளையாடச் சென்ற தங்களது மகனை சுமார் ஒரு மணி நேரமாக காணவில்லை என்பதால் தேடிய பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதே சமயம், ஒரு குழந்தையின் உடல் குழியில் இருப்பதாக தகவலறிந்து, போலீஸாருடன் அங்குச் சென்றபோது, தங்கள் மகன் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.