லக்னௌ: சமாஜ்வாதி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ரவுடிகள் என்று அவர்களது சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் செவ்வாய் காலை 11 மணியளவில் துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மாநில ஆளுநர் ராம் நாயக்கின் உரையுடன் கூட்டம் துவங்கியது.
ஆனால் கூட்டம் துவங்கியது முதல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. பாஜக ஆட்சிக்கு எதிராக கூச்சலிட்ட அவர்கள், உரையாற்றிக் கொண்டிருந்த ஆளுநர் மீது காகிதப் பந்துகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் .
இந்நிலையில் சமாஜ்வாதி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ரவுடிகள் என்று அவர்களது சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கையானது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புக்கு விரோதமானதாகும். இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயத்தை பலவீனமாக்குவதுடன், அமைப்புகளை மதிப்பிழக்கச் செய்கிறது.
குறிப்பாக சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அவையில் குண்டர்களை போன்று நடந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ரவுடிகள். அவர்கள் தங்களது கடந்த கால நடவடிக்கைகளை இன்னும் கைவிடவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.