அமெரிக்காவிடமிருந்து 72,400 நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அமெரிக்காவின் சிக் சாவர் நிறுவனத்திடமிருந்து 7.62 மி.மீ. வகை நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்குவதற்காக அந்த நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
உடனடி கொள்முதல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், 72,400 நவீன ரகத் துப்பாக்கிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படும்.
ரூ.700 கோடி செலவில் இந்தத் துப்பாக்கிகள் வாங்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியப் பாதுகாப்புப் படையினர் தற்போது இன்சாஸ் வகை தாக்குதல் ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வருகின்றன.
அவற்றுக்கு மாற்றாக, கூடுதல் திறன் கொண்ட துப்பாகிகள் உடனடியாகத் தேவைப்பட்ட நிலையில் அமெரிக்காவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
18 மாதங்களுக்கு முன்னதாக, மேற்கு வங்கத்தின் இஷாபூர் நகரிலுள்ள அரசுக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ரகத் துப்பாக்கிகள், களப் பரிசோதனையில் சரியான முறையில் இயங்காததால் அந்தத் துப்பாக்கிகளை ராணுவம் நிராகரித்தது.
இந்த நிலையில், தற்போது அமெரிக்கத் துப்பாக்கிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.