புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 12 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவியை உத்தரப் பிரதேச அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்ற வாகனத்தின் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 12 வீரர்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
அவ்தேஷ் குமார் யாதவ்(சந்தௌலி), பங்க குமார் திரிபாதி (மகராஜ்கஞ்ச்), அமித் குமார் (ஷாம்லி), பிரதீப் குமார் (ஷாம்லி), விஜய் குமார் மயூர்யா (தியோரியா), ராம் வஜீல் (மணிபுரி), மகேஷ் குமார் (அலாகாபாத்), ரமேஷ் யாதவ் (வாரணாசி), கௌசல் குமார் ராவத் (ஆக்ரா), பிரதீப் சிங் (கன்னெளஜ்), ஷியாம் பாபு (கான்பூர்) மற்றும் அஜித் குமார் ஆஸாத் (உன்னாவ்) ஆகிய 12 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இதைத் தவிர, அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உ.பி. முதல் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் ரூ.10 லட்சம் அறிவிப்பு: புல்வாமா மாவட்டத்தில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த ராணுவ வீரர் விஜய் சோரெங் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தார். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
மத்திய பிரதேசம் ரூ.1 கோடி அறிவிப்பு: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மத்திய பிரதேசம், ஜபல்பூர் மாவட்டம், குதவால் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அஸ்வினிகுமார் காச்சி குடும்பத்துக்கு அந்த மாநில அரசு ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. மேலும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.