வாராணசியில் மாணவர் தலைவர் சுட்டுக்கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் 22 வயது மாணவர் ஒருவர், அவர் தங்கியிருந்த விடுதிக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் 22 வயது மாணவர் ஒருவர், அவர் தங்கியிருந்த விடுதிக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வாராணசி உதய் பிரதாப் கல்லூரியில் இளநிலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் விவேக் சிங். மாணவர் தலைவரான இவர், அஜாம்கார் மாவட்டம் ஜாமூன்தீப் கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதிக்கு முன்பு துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்ததை, அச்சாலையில் சென்ற நபர் ஒருவர் பார்த்து, மாணவர்களிடம் தெரிவித்தார்.
மாணவர்கள் விவேக் சிங்கை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் விசாரணை நடத்தி, மோப்ப நாயை வரவழைத்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக, போலீஸார் 7 தனிப்படை அமைத்து, கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் குறித்து காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்த் குல்கர்னி கூறுகையில், கைத்துப்பாக்கியால் சுடப்பட்டதில், விவேக் சிங்கின் உடலில் 8 குண்டுகள் பாய்ந்துள்ளன என்று தெரிவித்தார்.
விவேக் சிங் இறந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட நீதிபதி சுரேந்திர சிங், கல்லூரி மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.
மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாதவகையில், விடுதிக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.