லக்னௌ: உத்தர பிரதேச மாநிலத்தில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் மட்டும், 50 லட்சம் லிட்டர் மது விற்பனை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மாநில கலால் துறை ஆவணங்களை மேற்கோள் காட்டி துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது:
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் மது விற்பனை தொடர்பான தகவல்கள் கலால் துறை மூலமாக பதிவு செய்யப்பட்டன.
அதில் டிசம்பர் 31 அன்று மட்டும் மது விற்பனை இரு மடங்காக நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த விற்பனை விபரத்தில் வீட்டில் மது வைத்திருந்து குடிப்பவர்கள் மற்றும் விடுதிகளில் விற்பனையானதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
அதன்படி டிசம்பர் 31 அன்று 31 லட்சம் லிட்டர் நாட்டு வகை மது விற்பனை ஆகியுள்ளது.
அதேபோல இந்தியாவில் தயாரிக்கப்படும் அந்நிய நாட்டு மது வகைகள் 18 லட்சம் லிட்டர் அளவுக்கு விற்பனையாகியுள்ளது.
அதுபோல இந்த இரு நாட்களில் 23 லட்சம் பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது.
இதன் மூலம் வருடா வருடம் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது என்பது உறுதியாகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.