பாட்னா: பிகார் மாநிலம் கயா மாவட்டதில், தங்களது 16 வயது மகள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்வா கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த மகளை இரண்டு நாட்களாகக் காணவில்லை என்று பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் அப்பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையும், படுபயங்கரமாக சிதைக்கப்பட்ட உடலும் வயல்வெளியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பலாத்காரக் கொலையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தினர். ஆனால், பிரேத பரிசோதனையில் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயங்கள் இல்லாததால் விசாரணையை வேறு கோணத்தில் திருப்பினர்.
அப்போது அவர்களது சந்தேகப் பார்வை பெற்றோர் மீது விழ, கூலிப் படையை ஏவி பெற்ற மகளைக் அவர்கள் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களையும், பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அதில், தங்களது மகள் வேறு இனத்தைச் சேர்ந்த இளைஞருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டு, 3 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய நிலையில், பெற்ற மகளை ஆணவக் கொலை செய்ய முடிவு செய்ததை பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.