தில்லி முதல்வர் கேஜரிவால் துணை நிலை ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும், போராட்டத்தில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜூன் 11 மாலை முதல் ஜூன் 19 வரை தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் அலுவலகத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது அமைச்சர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக, தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஹரிநாத் ராம் என்பவர் வழக்கறிஞர் சஷாங்க் சுதி மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, "தில்லி முதல்வர் உண்ணாவிரதம் இருப்பார், அவற்றை உச்ச நீதிமன்றம் தடுக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?" என்று கூறி தள்ளுபடி செய்தது.