""பிரதமர் மோடியின் புகழை கண்டு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி எதிர்க்கின்றன; ஆனால் அவர்களின் ஒற்றுமை கடைசி வரை நீடிக்க வாய்ப்பில்லை'' என ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்று வரும் "வைப்ரன்ட் குஜராத்'- சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டையொட்டி கருத்தரங்கில் பங்கேற்று பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கடைசி வரை நீடிக்காது. பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காகவே அவர்கள் ஒன்று கூடியுள்ளனர். மோடியின் புகழ் காரணமாகவே, இந்தியா உலகளவிலான வளர்ச்சிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதை மக்கள் உணர்ந்துள்ளதால், அவர்கள் மத்தியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த எதிர்க்கட்சிகளால் முடியாது.
முன்பு பல ஆண்டுகளாக அவர்கள் (எதிர்க்கட்சிகள்) நாட்டை சூறையாடினர். இப்போதும் நாட்டை சூறையாடுவதற்காகவே ஒன்று கூடியுள்ளனர். ஆனால், அதற்கான வாய்ப்பை தேசம் அவர்களுக்கு வழங்காது.
தொழில் முதலீட்டாளர்கள் ஹரியாணா மாநிலத்தில் தாராளமாக முன்வந்து தங்கள் வணிகத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு வருபவர்களுக்கு உரிமம் வழங்குவது, தடையில்லா சான்று உள்ளிட்ட தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து தர ஹரியாணா அரசு தயாராக உள்ளது என்று பேசினார்.
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பேரணி என்பது மாப்பிள்ளை இல்லாத திருமண ஊர்வலத்தைப் போன்றது என்றும் அவர் கேலியாக குறிப்பிட்டார்.