முகப்பு
இந்தியா

புதிய வழக்குகளை 4 நாள்களில் விசாரணைக்கு ஏற்க நடவடிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்குகளை, அவை தாக்கல் செய்யப்பட்ட 4 நாள்களுக்குள் விசாரணைக்கு ஏற்கும் வகையில் புதிய நடைமுறையை ஏற்படுத்த இருப்பதாக

Updated On : 24 ஜனவரி 2019, 12:53 am IST
பகிர்:


உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்குகளை, அவை தாக்கல் செய்யப்பட்ட 4 நாள்களுக்குள் விசாரணைக்கு ஏற்கும் வகையில் புதிய நடைமுறையை ஏற்படுத்த இருப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மனுவை பரிசீலிப்பது, முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டிய வழக்குகளை முடிவு செய்வது உள்ளிட்டவை குறித்து புதிய நடைமுறைகள் உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, வழக்குரைஞர் ஒருவர், தான் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், மூன்று நாள்கள் கடந்த பின்னரும் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியலில் இடம் பெறவில்லை என்று தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோயிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவர் கூறியதாவது:
ஒரு புதிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அது தானாவே நான்கு நாள்களுக்குள் விசாரணைக்கு வரும் வகையில் புதிய நடைமுறையை விரைவில் ஏற்படுத்த இருக்கிறோம். மனுவை விசாரிக்க 4 நாள்கள் வரை காத்திருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பதிவாளரிடம் வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுக்கலாம். 
இதன் பிறகு நீதிபதிகள் அந்த மனுவை அவசர வழக்காக ஏற்க வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்வார்கள் என்றார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.