நீரவ் மோடி குடும்பத்தாரின் வங்கிக் கணக்குகளை முடக்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பி.என்.பி.) ரூ.13,000 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி நீரவ் மோடி குடும்பத்தாரின் வங்கிக் கணக்குகளை முடக்க சிங்கப்பூர் நீதிமன்ற
புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பி.என்.பி.) ரூ.13,000 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி நீரவ் மோடி குடும்பத்தாரின் வங்கிக் கணக்குகளை முடக்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள வங்கிகளில் ரூ.44.41 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருக்கும் நீரவ் மோடியின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவரின் வங்கிக் கணக்குகளை முடக்க அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே, ஸ்விட்சர்லாந்தில் உள்ள நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரியின் வங்கிக் கணக்குகளை முடக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது சிங்கப்பூரில் உள்ள வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் நீரவ் மோடி, அவரது சகோதரி பூர்வி மோடி ஆகியோருக்கு 4 கணக்குகள் உள்ளன. இதில் நீரவ் மோடி தனது கணக்குகளில், 3,74,11,596 டாலர்களும், பூர்வி மோடி தனது கணக்குகளில் 27,38,136 டாலர்களும் டெபாசிட் செய்திருந்தனர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் மொத்தம் ரூ.283.16 கோடி பணம் டெபாசிட் செய்திருந்தனர்.
இதுகுறித்து ஸ்விட்சர்லாந்து நாட்டு அரசு அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை தகவல் தெரிவித்தது. நீரவ் மோடி, பூர்வி மோடி ஆகிய இருவருக்கு எதிராகவும் நிதி மோசடி வழக்கு நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி, அவர்களின் பணத்தை டெபாசிட் செய்ய அனுமதித்திருப்பது குற்றம் என்று ஸ்விட்சர்லாந்து அரசு அதிகாரிகளிடம் அமலாக்கத் துறை தெரியப்படுத்தியது.
அத்துடன், ஸ்விட்சர்லாந்து அரசு அதிகாரிகளிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்திலுள்ள கிரிமினல் பிரிவுகளின்கீழ், அந்த கணக்குகளை முடக்குவது தொடர்பான கோரிக்கையை அமலாக்கத் துறை அண்மையில் முன்வைத்தது. இதையேற்று, நீரவ் மோடி, பூர்வி மோடி ஆகியோருக்கு சொந்தமான 4 வங்கிக் கணக்குகளையும் ஸ்விட்சர்லாந்து அரசு முடக்கிவிட்டது.
அந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கையை எடுப்பது குறித்து அமலாக்கத் துறை ஆலோசித்து வருகிறது என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் குறிப்பிட்டன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டனர். இதில் நீரவ் மோடி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, இன்டர்போல் அமைப்பால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லண்டன் நீதிமன்றத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பான வழக்கு விசாரணையை அவர் எதிர்கொண்டு வருகிறார்.
இந்த விவகாரத்தில் மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் நீரவ் மோடி, பூர்வி மோடி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஜூலை 25 வரை காவல் நீட்டிப்பு
நீரவ் மோடியின் காவலை பிரிட்டன் நீதிமன்றம் ஜூலை மாதம் 25-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
லண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிறையில் தற்போது அவர் அடைக்கப்பட்டுள்ளார். லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருந்தபடி விடியோ கான்பரன்சிங் மூலம் நீரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீரவ் மோடியின் காவலை ஜூலை 25ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
பிரிட்டன் சட்டப்படி, நீதிமன்றத்தில் 4 வாரங்களுக்கு ஒருமுறை நீரவ் மோடி ஆஜர்படுத்தப்பட வேண்டும்.