கர்நாடக அரசில் இடம்பெற்றிருந்த 21 அமைச்சர்களும் ராஜிநாமா செய்திருப்பது அங்கு பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
காங்கிரஸின் 10 எம்எல்ஏக்கள், மஜதவின் 3 எம்எல்ஏக்கள் என 13 எம்எல்ஏக்கள் ராஜிநாமாவைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் 119 எம்எல்ஏக்கள் ஆதரவைப் பெற்றிருந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் தற்போது 105 ஆக குறைந்துவிட்டது. அதேநேரத்தில் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
கடந்த மாதம் அமைச்சராக நியமிக்கப்பட்ட சுயேட்சை எம்எல்ஏ நாகேஷ், தனது அமைச்சர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்பித்தார். மேலும் மாநிலத்தின் நன்மைக்காக பாஜக-வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக அரசில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 21 அமைச்சர்களும் தங்களுடைய பதவிகளை தானாக முன்வந்து ராஜிநாமா செய்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் சித்தராமையா திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதையடுத்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை இழந்துவிட்டதால் முதல்வர் பதவியை குமாரசாமி உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் அரசியல் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.