முகப்பு
இந்தியா

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா கடிதங்கள் மீது நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு 

கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 12 ஜூலை, 2019 at 6:56 PM
பகிர்:

புது தில்லி: கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.

அப்போது கர்நாடக சபாநாயகரின் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் எந்த கேள்வியும் எழுப்பக் கூடாது என நினைக்கிறீர்களா? என சபாநாயகர் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Advertisement

இதற்கு சபாநாயகர் ரமேஷ்குமாரின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி  பதில்  அளிக்கையில், நிச்சயமாக  அப்படி இல்லை.  இரண்டு எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க தொடங்கிய பொழுது அவர்கள் ராஜிநாமா கடிதத்தை கொடுத்தார்கள்.  தற்போது தகுதி நீக்கத்தை தவிர்க்கவே மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர்.  அவர்களின் கோரிக்கையை ஏற்க கூடாது என்று தெரிவித்தார்.

தனக்குரிய கடமையில் இருந்து  சபாநாயகர் தவறிவிட்டார்.  அதன்காரணமாகவே  நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ராஜ்ஜரான வழக்கறிஞர் முகில் ரோத்தகி கூறினார்.

இந்நிலையில், அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது.  எனவே ராஜிநாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது.  ராஜிநாமா கடிதம் மீதான விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்.  அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணை செவ்வாய்கிழமை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.