லக்னௌ: பிரயாக்ராஜ் மத்திய சிறை, சுல்தான்புர் மற்றும் ரே பரேலி சிறைகளைத் தொடர்ந்து தற்போது உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவோர சிறைவாசிகளின் கொண்டாட்டக் காலம் போல இருக்கிறது.
தடை செய்யப்பட்ட மதுபான வகைகள், அதற்கு ஏற்ற காரசார இணை உணவுகள், கையில் ஒரு பக்கம் செல்போன், மறுபக்கம் துப்பாக்கியைப் பிடித்தபடி வீரதீரப் புகைப்படங்கள் என எதற்கும் பஞ்சம் இல்லாமல் வாழ்கிறார்கள் உன்னாவோ சிறைக் கைதிகள்.
குடத்துடன் தண்ணீர் பிடிக்க அல்லாடும் பொதுமக்களை விட, இவர்களது வாழ்க்கை படு ஜோராகவே இருக்கிறது. உன்னாவோ சிறைவாசிகளின் உன்னத வாழ்க்கை பற்றிய விடியோ பலரையும் தூங்க விடாமல் செய்துள்ளது வேறுகதை.
சரி நேராக விஷயத்துக்கு வரலாம்,
உன்னாவோ மாவட்ட சிறைச் சாலையில் சிறைக் கைதிகளின் புகைப்படம், விடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதில், ஒரு சிறைவாசி தனது கையில் துப்பாக்கியைப் பிடித்தபடி வானை நோக்கிச் சுடும் விடியோ, மதுபான விருந்தின் புகைப்படம் என ஏராளமான கொண்டாட்டங்கள் வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் வெளியே வந்ததால் சிறை அதிகாரி, உதவி சிறை அதிகாரி, வார்டன், தலைமை வார்டன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வழக்கம் போல விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. (இன்னமும் இதையெல்லாம் விசாரித்துத்தான் தெரிஞ்சிக்கணுமா?)
இது குறித்து சிறைத்துறை என்ன சொல்கிறது என்றால்? சிறைவாசிகள் வைத்திருக்கும் துப்பாக்கி போலியானது, மண்ணால் செய்யப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்ட ஒன்று, மது விருந்தெல்லாம் இல்லை, பாட்டிலில் ஊற்றப்பட்ட எண்ணெய்தான் என்றெல்லாம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சரி எல்லாமே பொய்தான், ஆனால் இதையெல்லாம் புகைப்படம் எடுக்க செல்போன் எப்படி கிடைத்தது என்று அடுத்த கேள்வி தொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமா, அந்த விடியோவில் சிறைக் கைதி, கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு, எங்களை எதுவும் செய்ய முடியாது, நாங்கள் சிறைக்குள் இருந்து கொண்டே இயங்குவோம் என்று விடியோவில் பதிவிட்டிருக்கிறார்கள். அதுதான் ஹைலைட்டே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.