மக்களவையில் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று நாடு முழுவதும் 500 இடங்களில் கூடுதலாக ரயில் நிறுத்தங்களை ஏற்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் எங்கெல்லாம் ரயில் நிறுத்தங்களை ஏற்படுத்த முடியும் என்பது குறித்து அறிவியல் பூர்வமாகவும், பாகுபாடின்றியும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு முறை நீடித்த ஐக்கிய முற்போக்கு ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது, 2,472 இடங்களில் ரயில் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போதைய, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்த எண்ணிக்கையில் பாதியளவுக்கு ரயில் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், இப்போதும் எம்.பி.க்கள் தங்களது தொகுதியில் புதிதாக அமைக்கப்பட வேண்டிய ரயில் நிறுத்தங்கள் குறித்து ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி அனுப்பி வருகின்றனர். தேர்தல் பிரசாரத்துக்கு செல்வதற்கு முன்னதாக ரயில் நிறுத்தங்கள் குறித்து அறிவிக்கும்படி ரயில்வே அமைச்சகத்தை எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், இன்னும் சில தினங்களில் மாதிரி ரயில்நிலையங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளது. இவற்றுடன், புதிய ரயில் நிறுத்தங்கள் குறித்த அறிவிப்பையும், அதற்கான அங்கீகாரத்தை பெறும் முயற்சியிலும் எம்.பி.க்கள் முனைப்புடன் உள்ளனர் என்றார்.
அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் அதிவிரைவு ரயிலை நிறுத்தி இயக்குமாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விடுத்த கோரிக்கையை ஏற்று அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல பாஜக தலைவர்களில் ஒருவரான பாபுல் சுப்ரியோ தனது சுட்டுரைப் பக்கத்தில், தனது தொகுதியான மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் ரயில் நிலையத்தில் ஹவுரா-ராஜ்தானி விரைவு ரயிலை நிறுத்தி இயக்குமாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.