ஜார்க்கண்ட் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட இயக்கமான திரிதியா பிரஸ்துதி கமிட்டி (டிபிசி)யை சேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
ஷத்ரா மற்றும் ஹஸாரிபாக் மாவட்ட எல்லையில் தாரா வனப்பகுதிக்குள் வியாழக்கிழமை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், தீவிரவாதிகளைத் தேடி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட ஆரம்பித்தனர்.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை நோக்கி திருப்பிச் சுட்டதில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (செயலாக்கம்) நிகம் பிரசாத் தெரிவித்தார்.
உயிரிழந்த தீவிரவாதிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் முழு விவரமும் விசாரணைக்கு பிறகு தெரிய வரும். இறந்தவர்களிடம் இருந்து, ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸார் தெரிவித்தனர்.