பிகாரில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா கூட்டணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிகார் காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் கூறியதாவது:
மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு குறித்து தில்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாகா, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மாஞ்சி ஆகியோரும் பங்கேற்றனர். பிகாரில் 40 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடவுள்ளோம் என்றார்.
ஜிதன் ராம் மாஞ்சியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முனைந்தபோது, தொகுதிப் பங்கீட்டில் எந்தவித மனக்கசப்பும் ஏற்படவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என்றார்.