கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த மாநில அமைச்சர் விஜய் சர்தேசாய் தெரிவித்தார்.
கோவாவில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்றுவரும் பாரிக்கரை விஜய் சர்தேசாய் மற்றும் ஆளும் பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் 5 எம்எல்ஏக்கள் சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் விஜய் சர்தேசாய் கூறியதாவது:
பாரிக்கருக்கு புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்ட பிறகு, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இருப்பினும், அவர் தைரியத்துடன் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆரோக்கிய குறைவு இருந்தாலும் அவரது உடல் நிலை சீராக உள்ளது.
புதிய அரசு அமைக்க வேண்டிய அவசியமில்லை. கோவாவுக்கு முதல்வர் இருக்கிறார் என்றார் விஜய் சர்தேசாய்.
காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு அக்கட்சி சனிக்கிழமை கடிதம் அளித்த நிலையில், விஜய் சர்தேசாய்-பாரிக்கர் சந்திப்பு நடைபெற்றது.