முகப்பு
இந்தியா

பாலாகோட்டில் தாக்குதல் நடத்த முடிவு எடுத்தது ஏன்?  "நானும் பாதுகாவலனே" நிகழ்ச்சியில் மோடி விளக்கம்

"நானும் பாதுகாவலனே" நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம் எங்கிருந்து இயக்கப்படுகிறதோ அங்கு தான் தாக்குதலை நடத்த வேண்டும் என்பதால் பாலாகோட் தாக்குதல் முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:31 AM
பகிர்:


"நானும் பாதுகாவலனே" நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம் எங்கிருந்து இயக்கப்படுகிறதோ அங்கு தான் தாக்குதலை நடத்த வேண்டும் என்பதால் பாலாகோட் தாக்குதல் முடிவை எடுத்ததாக தெரிவித்தார். 

"நானும் பாதுகாவலனே" என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்காக தில்லி தால்கதோரா மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்காக நாடு முழுவதும் 500 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களிடமும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். 

அப்போது, பாலாகோட் தாக்குதல் குறித்து பேசிய அவர், 

"பாகிஸ்தான் இக்கட்டான நிலையில் உள்ளது. பாலாகோட்டில் தாக்குதல் நடந்தது என்று கூறினால், அங்கு பயங்கரவாதம் செயல்படுகிறது என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக அர்த்தமாகிவிடும். அதனால், அங்கு எதுவும் நடக்கவில்லை என்று தான் உலகுக்கு தெரிவிப்பார்கள். நாம் தாக்குதல் நடத்திய இடத்தை அவர்களால் மறைக்க முடியாது. 

ஒன்றரை மாதங்களுக்கு பிறகும் அவர்கள் அந்த பகுதிக்கு யாரையும் அனுமதிப்பதில்லை. பாகிஸ்தான் அந்த இடத்தை மறுகட்டமைப்பு செய்துவருவதாக ஒரு சிலர் கூறுகின்றனர். அங்கு பள்ளிகள் செயல்படுவதாக பாகிஸ்தான் கூறுகிறது. இதன்மூலம், அங்கு பயங்கரவாத முகாம்கள் செயல்படவில்லை என்று உலகுக்கு கூறலாம். 

நாம் கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறோம். அவர்கள் மும்பைக்கும், உரிக்கும் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு காரணம் யார் என்று நமக்கு தெரியும்.  

பயங்கரவாதம் அந்த முகாம்களில் இருந்து தான் இயக்கப்படுகிறது என்று உறுதி செயப்பட்டதால் அந்த இடம் குறிவைக்கப்பட்டது. இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து பாகிஸ்தானுக்கு கவலையில்லை. ஆனால், அங்கு பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டுவந்தது என்பதில் தான் அவர்களுக்கு பிரச்னை. 

பாலாகோட் தாக்குதலை நான் நிகழ்த்தவில்லை. நமது வீரர்கள் தான் நிகழ்த்தினார்கள். நமது ராணுவப் படையினர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்ததால் என்னால் அந்த முடிவை எடுக்க முடிந்தது. அவர்களது திறன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு தலை வணங்க வேண்டும். 

பாலாகோட் தாக்குதலில் மோடியை விமரிசிப்பவர்கள் தங்களது கருத்துகள் மூலம் பாகிஸ்தானுக்கு உதவுகிறார்கள்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →