ஒடிஸாவில் கரையைக் கடந்தது ஃபானி புயல்: மேற்கு வங்கத்தை நோக்கி நகர்கிறது! (விடியோ)
ஒடிஸாவில் இன்று காலை 8 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கிய ஃபானி புயல் 11 மணிக்குக் கரையைக் கடந்தது.
புவனேஸ்வர்: ஒடிஸாவில் இன்று காலை 8 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கிய ஃபானி புயல் 11 மணிக்குக் கரையைக் கடந்தது.
ஃபானி புயலின் கண் பகுதி கரையைக் கடந்த போது, மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
இன்று பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபானி புயல் முன்கூட்டியே இன்று காலை 8 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கியது. வரலாறு காணாத உச்ச உயர் தீவிரப் புயலான ஃபானி புயல் சுமார் 3 மணி நேரம் கரையைக் கடந்து 11 மணிக்கு கரையை நடந்து முடித்தது.
ஒடிஸாவில் கரையைக் கடந்த ஃபானி புயல் அதே வேகத்தில் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருவதால், கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
சூறைக் காற்று காரணமாக மரங்களும், மின்கம்பங்களும் விழுந்தன. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்திருப்பதால் மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிஸாவின் கடலோரப் பகுதிகளில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதிகபட்சமாக கஞ்சம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இலவச தொலைபேசி எண் 1938 அறிவிக்கப்பட்டுள்ளது.