ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன்!
ராஜபாளையம் தொகுதியில் தமமுக வோட்பாளராக ஜான் பாண்டியனின் மனைவி களமிறக்கப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் தொகுதியில் தமமுக வோட்பாளராக ஜான் பாண்டியனின் மனைவி களமிறக்கப்பட்டுள்ளார்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த தொகுதியில் த.ம.மு.க. சார்பாக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரிசில்லா ஜான் பாண்டியன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் எனது மனைவியும், பொதுச்செயலாளருமான வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார்.
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த ஓராண்டாகவே தீவிர களப்பணி ஆற்றி வருகிறோம். அங்கு பிரதான பிரசனையாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு ஏராளமான பிரசனைகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் தீர்த்து வைப்போம். இன்று மாலையே ராஜபாளையத்தில் முகாமிட்டு களப்பணியை தொடங்க உள்ளோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். தமிழக முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்த கூட்டணியின் தலைவரான எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் அரியணையில் அமர வைப்போம். எங்களது வேட்பாளர் சாதி, மத பேதம் இன்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் சேவை செய்வார்.
தொழிலாளர்கள் நிறைந்த அந்த பகுதியில் அவர்களது வாழ்வு மேம்பட கடினமாக உழைப்பார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிப்பு செய்து அதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது த.ம.மு.க மாநில இளைஞரணி செயலாளர் வியங்கோ, மகளிர் அணி செயலாளர் வினோலின் நிவேதா, துணை பொதுச்செயலாளர் சண்முகசுதாகர், மண்டல தலைவர் கண்மணி மாவீரன், மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.