முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சி எம்.எல் ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் இழுப்பதுதான் ஜனநாயகமா?: மோடிக்கு கேஜரிவால் கேள்வி 

எதிர்க்கட்சி எம்.எல் ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் இழுப்பதுதான் ஜனநாயகமா? என்று பிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 3 மே, 2019 at 3:54 PM
பகிர்:

புது தில்லி: எதிர்க்கட்சி எம்.எல் ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் இழுப்பதுதான் ஜனநாயகமா? என்று பிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரும் தில்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார். இதுபற்றி தில்லியில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் கூறியதாவது:

மத்திய பாஜக அரசுக்கு தங்கள் ஆட்சியில் வளர்ச்சிக்கான விஷயம் என்று கூறுவதற்கு எதுவும் இல்லை. எனவேதான் தற்போது அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement

தற்போது எங்களது கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்களை தலா ரூ.10 கோடிக்கு விலைக்கு வாங்க பா.ஜ.க. முயற்சிக்கிறது.

இதற்கு முன்னரும் கூட அக்கட்சி எங்களது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சித்தது.  ஆனால் அப்போது தேர்தலில் அவர்களுக்கு பொதுமக்கள் சரியான பதிலை வழங்கினர்.  இந்த முறையும் அவர்களது நடவடிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும்.

மேற்கு வங்க தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களைப் பற்றிப் பேசியது சரியல்ல.  இந்தியா ஒரு ஜனநாயக நாடு.  அதனாலேயே தற்போது தான் பதவியில் இருப்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

அதற்கு வியாழனன்று பதிலளித்த பாஜக, 'ஏழு எம்.எல்.ஏக்கள் அல்ல; ஆம் ஆத்மி கட்சியின் மீது வெறுப்படைந்துள்ள மொத்தம்  14 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியை விட்டு விலகத் தயாராக உள்ளதாக' தெரிவித்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.எல் ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் இழுப்பதுதான் ஜனநாயகமா? என்று பிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிட்டிருந்ததாவது:

மோடி அவர்களே! நீங்கள் மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளை அக்கட்சி எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கி கவிழ்க்க முயல்கிறீர்களா? இதுதான் உங்கள் பார்வையில் ஜனநாயகம் என்பதற்கு அர்த்தமா? அவர்களை விலைக்கு வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? முன்பு எங்கள் எம்.எல்.ஏக்களையும் விலைக்கு வாங்க முயன்றீர்கள். ஆம் ஆத்மி தலைவர்களை விலைக்கு வாங்குவது எளிதல்ல!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.